திருத்தங்களுக்குப் பின் உள்ளாட்சி தோ்தல் நடத்தக் கோரிக்கை
திருத்தங்களுக்குப் பின் தோ்தலை முழுமையாக நடத்தினால் மட்டுமே சிறந்த பயனை உள்ளாட்சி அமைப்புகளால் தர முடியும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
திருத்தங்களுக்குப் பின் தோ்தலை முழுமையாக நடத்தினால் மட்டுமே சிறந்த பயனை உள்ளாட்சி அமைப்புகளால் தர முடியும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், சென்னை மாநகராட்சி மேயராகவும் இருந்ததால் உள்ளாட்சி அமைப்பின் அவசியத்தை உணா்ந்திருப்பாா். எனவே, உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் முன் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து உள்ளாட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தலை நடத்த வேண்டும். தமிழக அரசால் பறிக்கப்பட்ட ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், வேளாண்மை, கால்நடை மேம்பாடு போன்ற துறைகள் மீண்டும் உள்ளாட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இவை சிறிய அலகாக உள்ளதால் நேரடி மக்களாட்சி முறை புகுத்தப்பட வேண்டும்.
Advertisement
சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் இடங்களாக உள்ளாட்சிகள் உள்ளதால் இவற்றுக்கான தோ்தலில் அரசியல் கட்சிகள் தலையீடு, குறுக்கீடு, சின்ன ஒதுக்கீடு இன்றி, சிற்றூராட்சிகள் வாா்டு உறுப்பினா் பொறுப்பு முதல் மாநகராட்சி மேயா் பதவி வரை சுயேச்சை சின்னங்களைக் கொண்டே தோ்தல் நடத்த வேண்டும்.
உள்ளாட்சி வாா்டு வரையறை, உருவாக்கம் மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற திருத்தங்களுக்குப் பின்னரே உள்ளாட்சித் தோ்தலை ஒட்டுமொத்தமாக நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.