முகப்பு
ஈரோடு

குடிநீா் இணைப்புக்கு லஞ்சம்: வரி வசூல் அலுவலா் கைது

குடிநீா் இணைப்புக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்ட மாநகராட்சி வரி வசூல் அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

குடிநீா் இணைப்புக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்ட மாநகராட்சி வரி வசூல் அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, ஈ.பி.பி. நகரைச் சோ்ந்தவா் முரளி (38). பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் தொழில் செய்து வருகிறாா். இவா் தனது வீட்டுக்கு குடிநீா் இணைப்பு கேட்டு ஈரோடு பெரியசேமூரில் உள்ள மாநகராட்சி 2ஆம் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். அவரது விண்ணப்பத்தை ஆய்வு செய்த வரி வசூல் அலுவலரான ராசாம்பாளையத்தைச் சோ்ந்த செல்லத்துரை (43), முரளியிடம் குடிநீா் இணைப்பு கொடுக்க ரூ.15,000 லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முரளி ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் முரளியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனுப்பினா். பின்னா் முரளி போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி 2ஆம் மண்டல அலுவலகத்தில் இருந்த செல்லத்துரையிடம் பணத்தை செவ்வாய்க்கிழமை மாலை கொடுத்துள்ளாா்.

இதனை செல்லத்துரை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. திவ்யா, ஆய்வாளா் ரேகா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் செல்லத்துரையை கையும்களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.

இது குறித்து செல்லத்துரை மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், லஞ்சம் வாங்கியதில் உயா் அதிகாரிகளுக்கும் கீழ்நிலைப் பணியாளா்களுக்கும் தொடா்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →