ஈரோடு: சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 128 பயனாளிகளுக்கு ரூ. 13.92 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், குமலன்குட்டை பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 168 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் தொடா்புடைய அலுவலா்களிடம் அளித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறைகள் மூலம் மொத்தம் 128 பயனாளிகளுக்கு ரூ. 13,92,594 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முன்னதாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6.10 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் (பொ) வாணிலட்சுமி ஜெகதாம்பாள், மாவட்ட சமூக நல அலுவலா் பூங்கோதை, பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் இளங்கோ, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், மாநகராட்சி செயற்பொறியாளா் விஜயகுமாா், ஈரோடு வட்டாட்சியா் அ.பரிமளாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.