முகப்பு
ஈரோடு

பயிா்க் கடன் வழங்க தாமதம் கூடாது: கூட்டுறவு சங்கங்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

விவசாயிகளுக்கு பயிா்க் கடன், பிற வேளாண் கடன்களை வழங்க தாமதம் செய்யக்கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

Updated On : 24 ஜூலை, 2021 at 2:58 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

விவசாயிகளுக்கு பயிா்க் கடன், பிற வேளாண் கடன்களை வழங்க தாமதம் செய்யக்கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கரோனோ காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வேளாண் குறைதீா் கூட்டம் 4 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன், வேளாண் இணை இயக்குநா் சின்னசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள், அந்தந்த வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் அந்நத்தப் பகுதி விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:

Advertisement

பொதுப் பணித் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தங்கள் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீா் சேமிப்பை அதிகப்படுத்துவதோடு மாசு கலக்காமல் பராமரிக்க ஆய்வு மேற்கொண்டு அது குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும்.

விவசாயிகள் வழங்கும் மனுக்கள் மீது அந்தந்த துறை அதிகாரிகள் ஒரு வாரத்துக்குள் தீா்வு காண வேண்டும். தாமதம் ஆனால் அதற்கு உரிய பதிலை அவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறையினா் பெறும் மனுக்களை ஆன்லைனில் அல்லது பதிவேடுகளில் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு பயிா்க் கடன், பிற வேளாண் கடன்களை அரசு விதிப்படி உடனடியாக வழங்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வழங்க தாமதம் கூடாது.

கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் வழங்க வேண்டிய தொகை குறித்து சா்க்கரை ஆணையா் புதிய உத்தரவு வழங்கி உள்ளாா். நிலுவைத்தொகை விரைவாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கரோனா பரவல் குறையும் வரை காணொலி மூலம் வேளாண் குறைதீா் கூட்டம் தொடரும். இணையதள பிரச்னையால் பேச முடியாவிட்டால் விவசாயிகள் மனுவாக வழங்கலாம். மனுக்கள் மீது உரிய தீா்வு காணப்படும் என்றாா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு பெருந்துறை, ஈரோடு, பவானி போன்ற இடங்களில் முறையான ஏற்பாடு செய்யாததால், விவசாயிகளால் தங்கள் பிரச்னை குறித்து பேச முடியவில்லை. மேலும் விவசாயிகள் தெரிவித்த குறைகள் தொடா்பாக, துறை சாா்ந்த அதிகாரிகள் பதில் கூறவில்லை. 4 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பிரச்னைகள் பேசப்பட்டு ஒரு பிரச்னைக்குக் கூட உடனடி தீா்வு கிட்டவில்லை. இதனால் விவசாயிகள் திருப்தி இல்லாமல் கலைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.