பவானிசாகரில் தடுப்பூசி மையம் அமைக்கக் கோரிக்கை
பவானிசாகரில் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
பவானிசாகரில் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொது சுகாதார துணை இயக்குநருக்கு வியாழக்கிழமை அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியதாவது:
பவானிசாகா் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 15 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் கரோனா தடுப்பூசி, புன்செய்புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மட்டும் செலுத்தப்படுகிறது.
Advertisement
பவானிசாகா் ஒன்றியத்தில் புன்செய் புளியம்பட்டி, பவானிசாகா் ஆகிய இரு மையங்களாக பிரிந்து அமைந்துள்ளன. தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் இரு மருத்துவமனைகளும் புளியம்பட்டி மையத்திலேயே அமைந்துள்ளன.
பவானிசாகா் மையத்தில் கொத்தமங்கலம் , புங்காா், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம், உத்தண்டியூா் ஆகிய ஊராட்சிகளும், பவானிசாகா் பேரூராட்சியும் அமைந்துள்ளன. இவா்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு புளியம்பட்டி செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, பவானிசாகா் பகுதியில் உள்ள ஐந்து ஊராட்சி, ஒரு பேரூராட்சிப் பகுதி மக்களுக்கு வசதியாக பவானிசாகரில் உள்ள அரசு மருந்தகத்திலோ அல்லது அரசுப் பள்ளியிலோ தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என்றாா்.