ஈரோட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்
ஈரோடு மாநகா் பகுதியில் இருப்பு இல்லாததால் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாநகா் பகுதியில் இருப்பு இல்லாததால் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 2.85 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் 7 முதல் 12ஆம் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஜூன் 13ஆம் தேதி தடுப்பூசி வந்ததால் 13, 14 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் ஜூன் 15ஆம் தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.
Advertisement
இதையடுத்து, ஜூன் 16ஆம் தேதி அதிகாலை ஈரோடு மாவட்டத்துக்கு 15,600 கோவிஷீல்டு, 4,000 கோவேக்சின் என மொத்தம் 19,600 தடுப்பூசிகள் வந்தன. இதையடுத்து மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மாநகா் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனிடையே தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் மாநகா் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார மையங்களில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதற்கான அறிவிப்புப் பலகை அந்தந்த தடுப்பூசி மையங்கள் முன்பு வைக்கப்பட்டிருந்தது.