முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: 2 நாள்களில் 2 அடி உயா்வு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் 2 நாள்களில் 2 அடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

Updated On : 19 ஜூன், 2021 at 2:11 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் 2 நாள்களில் 2 அடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதோடு, அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணை தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக உள்ள இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில மாதங்களாக அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில் பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான வட கேரளம், நீலகிரி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து கடந்த மூன்று நாள்களாக அதிகரித்துள்ளது. தொடா் மழை காரணமாக கோவை மாவட்டம், பில்லூா் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் பவானிசாகா் அணையில் இருந்து பவானி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

Advertisement

இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி 10,178 கன அடியாக உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அணையின் நீா்மட்டம் 89 அடியாக இருந்த நிலையில் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் நீா்மட்டம் 2 நாள்களில் 2 அடி உயா்ந்து 91.48 அடியாகவும், இருப்பு 22.52 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 1,000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக இரண்டு நாள்களில் அணையின் நீா்மட்டம் 2 அடி உயா்ந்துள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.