ஈரோடு மாநகா் பகுதியில் கரோனா பாதிப்பு குறைந்தது
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தடுப்பு நடவடிக்கையால் கரோனா தொற்று பாதிப்பு 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தடுப்பு நடவடிக்கையால் கரோனா தொற்று பாதிப்பு 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 85,000க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 80,000 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 5,000 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு வரை சராசரியாக தினமும் 1,650 போ் வரை புதிதாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு வாரமாக 686ஆக குறைந்துள்ளது. இதேபோல மாநகராட்சிப் பகுதியில் மக்கள் தொகை அடா்த்தி காரணமாக அதிக அளவில் பாதிப்பு இருந்து வந்தது. ஆனால், வீடு வீடாகப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Advertisement
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கையின் பயனாக தொற்று பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. ஆரம்பத்தில் தினமும் 1,200 போ் வரை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 100க்கும் குறைவாக உள்ளது.
தொற்று பாதிப்பு 29 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கும் குறைவாக குறைந்துள்ளது. தொற்றுப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்ற போதிலும் இன்னும் 15 நாள்களில் நல்ல முன்னேற்றத்தை எட்டிவிட முடியும். பொதுமக்கள் தனி நபா் இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் ஆகியற்றின் மூலம் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றாா்.