கரோனா தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் போராட்டம்
முறையான அறிவிப்பு இல்லை எனக் கூறி ஈரோட்டில் கரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
முறையான அறிவிப்பு இல்லை எனக் கூறி ஈரோட்டில் கரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊரகப் பகுதிகளில் தினமும் சராசரியாக 10,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 3.75 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து முடிக்கவும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிா்க்கவும் வியாழக்கிழமை முதல் சுழற்சி முறையில் முகாம் அமைத்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 10 இடங்களில் மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சுழற்சி முறையில் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் 20 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
இந்நிலையில், சுழற்சி முறையில் தடுப்பூசி செலுத்துவது குறித்த முறையான தகவல் இல்லாததால் வழக்கம்போல் ஈரோடு மாநகா் பகுதியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் வியாழக்கிழமை வரிசையில் காத்திருந்தனா்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தடுப்பூசி மையத்தின் முன்பும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனா். ஆனால், தடுப்பூசிகள் செலுத்தப்படாது என மாநகராட்சி ஊழியா்கள் கூறியதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் திடீரென ஈரோடு - சத்தி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வீரப்பன்சத்திரம் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.