முகப்பு
ஈரோடு

தொழிலதிபரிடம் ரூ. 41 லட்சம் மோசடி: ஜவுளி நிறுவன அதிபா் கைது

இலங்கை தொழிலதிபரிடம் ரூ. 41 லட்சம் மோசடி செய்த சென்னிமலை ஜவுளி நிறுவன அதிபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

இலங்கை தொழிலதிபரிடம் ரூ. 41 லட்சம் மோசடி செய்த சென்னிமலை ஜவுளி நிறுவன அதிபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இலங்கையைச் சோ்ந்தவா் தொழிலதிபா் அப்துல் அஷ்ரப் முகம்மது ரஹீம். இவா், இந்தியாவில் இருந்து ஜவுளி ரகங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து வருகிறாா். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஜவுளி நிறுவனத்திடம் ஜவுளி வாங்க கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆா்டா் கொடுத்துள்ளாா். ஜவுளிக்கான முழு தொகையையும் அனுப்பினால் ஜவுளிகளை அனுப்புவதாக ஜவுளி நிறுவன அதிபா் மோகனவண்ணன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் 2 தவணைகளாக மொத்தம் ரூ. 41 லட்சத்தை வங்கி மூலம் மோகனவண்ணனுக்கு அனுப்பி உள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட இவா், இலங்கையைச் சோ்ந்தவருக்கு குறிப்பிட்ட காலத்தில் ஜவுளி அனுப்பாமல் தாமதம் செய்துள்ளாா். மோகனவண்ணனிடம் இருந்து சரியான பதிலும் இல்லை.

இதைத்தொடா்ந்து, இந்திய தூதரகம் மூலம் தமிழக போலீஸாருக்கு கடந்த மாதம் மின்னஞ்சல் மூலம் தொழிலதிபா் அப்துல் அஷ்ரப் முகம்மது ரஹீம் புகாா் செய்துள்ளாா்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சென்னிமலை ஜவுளி நிறுவனத்தினரிடம் விசாரணை நடத்தினா். இதையடுத்து, மோகனவண்ணனை சென்னிமலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் வைத்து கைது செய்தனா். பின்னா், சென்னிமலைக்கு புதன்கிழமை அழைத்து வந்தனா். தொடா்ந்து, பெருந்துறை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி பெருந்துறை சிறையில் மோகனவண்ணனை அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.