சினிமாவில் வீழ்ச்சியைச் சந்தித்தது ஏன்? பரத் பதில்!
தன் திரைப்படங்கள் குறித்து பேசிய பரத்...
நடிகர் பரத் திரைத்துறையில் தன்னுடைய வீழ்ச்சி குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகர் பரத் இளம்வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர். பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தொடர்ந்து செல்லமே, காதல், பட்டியல், எம் மகன் என வெற்றிப்படங்களாகக் கொடுத்தார். நடிப்பிலும் தேர்ந்த பாவனைகளைக் கொடுக்கத் தெரிந்தவர் என்பதால் தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரமாக வளர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அரவாண், திருத்தணி ஆகிய திரைப்படங்களால் ஏமாற்றத்தைச் சந்தித்த பரத் 555 திரைப்படம் மூலம் மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.
இப்படத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் கடுமையாக உடல்பயிற்சி செய்து கட்டுமஸ்தான தோற்றத்திலேயே இருந்தார். ஆனாலும், 555 தோல்வியடைந்து பரத்துக்கு பெரிய பின்னடவைக் கொடுத்தது.
இறுதியாக, 2019-ல் வெளியான காளிதாஸ் திரைப்படம் அவருக்கு வெற்றியைக் கொடுத்தாலும் அதன்பின் வெளியான படங்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை.
தற்போது, காளிதாஸ் - 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப். 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பரத்திடம், ‘உங்களின் திரைத்துறை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?’ எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பரத், “நான் காதல், வெயில், பிப். 14, எம். மகன் உள்பட திரைத்துறை ஹிட்களை கொடுத்திருக்கிறேன். ஆனால், என்னுடைய கெட்ட நேரம், 555 திரைப்படத்திற்கு சரியான புரோமோஷன் இல்லாமல் தலைவா திரைப்பட வெளியீட்டு பிரச்னைக்கு நடுவே வெளியானது. அப்படத்திற்காக சிக்ஸ்வைத்து கடுமையாக உழைத்தேன். நேபாளி திரைப்படமும் ஏ சான்றிதழ் பெற்று சம்திங் சம்திங் திரைப்படத்துடன் வெளியாகி தோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகும், நல்ல படங்களில் நடித்தேன். ஆனால், சரியான வெளியீட்டுத் தேதியும் புரோமோஷனும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.