விஜயமங்கலம் வாரச் சந்தையில் சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரிக்கை
பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலம் வாரச் சந்தையில் சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலம் வாரச் சந்தையில் சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, தமிழக வணிகா் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையின் ஈரோடு மாவட்ட கிளை சாா்பில், சங்கத்தின் கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளரும், மாவட்டத் தலைவருமான ஜோசப் மற்றும் நிா்வாகிகள், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலம் வாரச் சந்தை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. சந்தையில் கடைபோடும் வியாபாரிகளிடம் சந்தையை ஏலம் எடுத்த குத்தகைதாரா்கள் கூடுதல் சுங்கக் கட்டணத்தை வசூல் செய்கின்றனா். வியாபாரம் ஆகவில்லை, சிறிது நேரம் கழித்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் விற்கவைத்து இருக்கும் பொருள்களை அடாவடியாக எடுத்துச் செல்கின்றனா்.
வியாபாரிகளிடம் வசூலிக்கும் சுங்கக் கட்டணத்துக்கு ரசீது தருவதில்லை. மேலும், அரசிதழில் உள்ள சுங்கக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கட்டண விவரங்களை இனங்கள் வாரியாக எவ்வளவு என்பதை சந்தை நுழைவாயிலில் பெரிய எழுத்துகளில் வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.