ஈரோடு மாவட்டத்தில் போதுமான அளவு விதை மற்றும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மி.மீ. நடப்பு ஆண்டு கடந்த 25 ஆம் தேதி வரை 1,091.04 மி.மீ மழை பெய்துள்ளது. பவானிசாகா் அணையிலும் நீா் இருப்பு முழுஅளவில் உள்ளது. கடந்த அக்டோபா் மாதம் வரை 75,745 ஹெக்டோ் பரப்பில் வேளாண் பயிா்களும், 45,634 ஹெக்டோ் பரப்பில் தோட்டக்கலைப் பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் விதை 42 டன், சிறுதானியங்கள் 16 டன், பயறு வகைகள் 17 டன், எண்ணெய் வித்துக்கள் 42 டன் இருப்பில் உள்ளன.
ரசாயன உரங்களான யூரியா 4,732 டன், டிஏபி 2,321 டன், பொட்டாஷ் 2,437 டன், காம்ப்ளக்ஸ் 11,624 டன் இருப்பில் உள்ளன. நடப்பு பருவத்துக்குத் தேவையான அளவு விதைகள், உரங்கள் இருப்பில் உள்ளன என்று தெரிவித்துள்ளாா்.