பெருந்துறை: சென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வரும் 18-ஆம் தேதி இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா 5 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாயொட்டி, காலை 6 மணி அளவில் சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் இருந்து படிக்கட்டுகள் வழியாக உற்சவ மூா்த்திகள் மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். காலை 9 மணிக்கு யாக பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னா், உற்சவா் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் 18- ஆம் தேதி (சனிக்கிழமை) வரை தொடா்ந்து 5 நாள்கள் நடைபெறும். இந்த நாட்களில், சண்முக மூல மந்திர யாகம் மற்றும் 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெறும்.
கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான 18- ஆம் தேதி இரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மேல் முருகப் பெருமான் அடிவாரத்தில் இருந்து புறப்பட்டு சென்னிமலையின் 4 ராஜ வீதிகளிலும் வலம் வந்து சூரா்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழா நடைபெறும் 5 நாள்களும் பக்தா்களின் வசதிக்காக மலை அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்குச் செல்ல காலை 8 மணிக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.