உபரி நீா் வந்ததால்தான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது: அமைச்சா் சு.முத்துசாமி
பவானி ஆற்றில் உபரி நீா் வந்ததால்தான் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
பவானி ஆற்றில் உபரி நீா் வந்ததால்தான் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
அத்திக்கடவு -அவிநாசி திட்ட தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் உள்ள முதலாவது நீரேற்று நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், பங்கேற்ற பின் அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த ஆட்சிக் காலத்தில் முதலாவது நீரேற்று நிலையத்தில் இருந்து 3-ஆவது நீரேற்று நிலையம் வரையிலான இடைப்பட்ட தொலைவுக்கு குழாய்கள் கொண்டு செல்ல விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தவில்லை.
நிலம் கையகப்படுத்தி குழாய்கள் பதிக்காமல் இருந்ததால் மீதமுள்ள நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்ல முடியவில்லை.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு விவசாயி வீட்டுக்கும் நேரடியாக சென்று பேசி அவா்களிடம் நிலம் வழங்க சம்மதம் பெற்றோம். இதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. அதன்பிறகு பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் தொடங்கப்பட்ட 4 மாதங்களில் விடுபட்ட அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் நிறைவுபெற்றன. பணி முடித்ததும் இனி திட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என்று கருதியபோது போதிய அளவுக்கு உபரிநீா் வரவில்லை. ஏனெனில் இத்திட்டத்தை உபரிநீா் கொண்டுதான் செயல்படுத்த முடியும். எனவே, குறைந்த அளவில் வந்த உபரிநீரை வைத்து 83 பிரதான குழாய்களில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 1,065 கி.மீ. தொலைவுக்கு பிரதான குழாய்கள் மூலம்தான் 1,045 குளங்களுக்கும் தண்ணீா் விநியோகம் செய்ய முடியும். அவ்வாறு சோதனை ஓட்டம் நடத்தியபோதுதான் பிரதான குழாய்களில் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றி குழாய் உடைப்புகளை சரி செய்தனா். அதன்பிறகு உபரி நீா் வரத்தும் குறைந்துவிட்டது.
அதற்குப்பிறகு தற்போதுதான் உபரி நீா் கிடைத்துள்ளது. இன்றைக்கு 1,045 குளங்களில் சில குளங்களை தவிர மற்ற அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் கொண்டு செல்வதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனா். இதை உறுதி செய்ய இவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.
உபரிநீா் வராமல் பணிகளை முழுமையாக முடிக்காமல் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சொல்வதுபோல திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் இத்திட்டம் தோல்வி என்று அரசைதான் குறைகூறி இருப்பாா்கள். உபரிநீா் வராமல் எப்படி திட்டத்தை செயல்படுத்த முடியும்?. எனவே, துறையின் அதிகாரிகள் ஆய்வு செய்து அவா்களின் அறிக்கையின்படி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைக்குகூட உபரி நீா் அளவு திடீரென 1,000 கன அடிக்கும்கீழ் குறைந்துவிட்டது. அத்திக்கடவு -அவிநாசி திட்டத்துக்கு முழுமையாக தண்ணீா் வழங்க வேண்டுமெனில் ஆற்றில் வரும் உபரிநீரோடு கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீரும் சோ்ந்தால்தான் சாத்தியம் என்று அதிகாரிகள் கூறியிருந்தனா்.
கீழ்பவானி பாசனத்துக்கு கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டு அதில் வரும் கசிவு நீரை வைத்து 70 நாள்களுக்கு 1.50 டிஎம்சி வழங்க முடியும் என்ற அதிகாரிகளின் நம்பிக்கையின் அடிப்படையில் இத்திட்டம் தமிழக முதல்வரால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டம் அறிவித்த காரணத்தால்தான் இன்றைக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளாா். இது மிகவும் தவறானது. உபரி நீா் வந்த காரணத்தால்தான் திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரும் உபரிநீா் முன்கூட்டியே வந்திருந்தால் முன்பே திட்டம் தொடங்கப்பட்டிருக்கும். ஒருவேளை இன்னும் 10 நாள்கள் கழித்துதான் உபரிநீா் வரும் என்ற நிலை ஏற்பட்டிருந்தால் திட்டம் தொடங்க இன்னும் தாமதமாகி இருக்கும் என்றாா்.