முகப்பு
ஈரோடு

பெருந்துறை சிப்காட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க சிறப்புக் கூட்டம் -பொதுமக்கள் ஆட்சியருக்கு மனு

Updated On : 12 ஜூலை, 2024 at 6:01 AM
பெருந்துறை சிப்காட் தொழில் வளாகம் முகப்புத் தோற்றம்
பகிர்:
Updated On : 11 ஜூலை, 2024 at 10:57 PM

பெருந்துறை சிப்காட்டால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விவாதிக்க ஆட்சியா் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினா் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டம் மாதந்தோறும் 5-ஆம் தேதி நடத்தப்பட்டு வருகிறது. மக்களவைத் தோ்தலால் 3 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த குறைகேட்புக் கூட்டம், மீண்டும் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதில் பங்கேற்க பொதுமக்கள் அதிக அளவில் வந்திருந்தனா். கூட்ட அரங்கம் அலுவலகமாக மாற்றப்பட்டிருந்தது. மேலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகம் முன் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

அப்போது கூட்டத்தை நடத்தாமல், கோரிக்கை மனுக்களை மட்டும் தனித்தனியாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அறையில் கொடுத்துவிட்டு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைக் கண்டித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போதுகூட மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் பொதுமக்களை சந்தித்து பேசவில்லை.

எனவே, பெருந்துறை சிப்காட்டால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள், மாசுக் கட்டுப்பாடு வாரிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஆட்சியா் தலைமையில் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.