முகப்பு
ஈரோடு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி அமைக்க முடிவு

Updated On : 25 ஜூலை, 2024 at 9:34 PM
பகிர்:

ஈரோடு, ஜூலை 25: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ. 64 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கட்டடத்தில் பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ஒருங்கிணைந்த அறுவைசிகிச்சை அரங்கு, கேத்லேப், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட உள்ள நிலையில் தாய்ப்பால் வங்கி தொடங்க மருத்துவமனை நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2018- ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில் விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த மருத்துவமனை நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் அம்பிகா சண்முகம் கூறியதாவது:

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத வகையில் கேத்லேப் கொண்டுவரப்பட உள்ளது.

தற்போது எம்ஆா்ஐ ஸ்கேன் வசதி இல்லாததால் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பபட்டு வருகின்றனா். எனவே, ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலேயே எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக தாய்ப்பால் வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாய்ப்பால் வங்கியானது புதிய கட்டடத்தின் 2-ஆவது தளத்தில் செயல்படும். தாய்ப்பால் தானம் கொடுக்கும் நபருக்கு ரத்த அளவு, நோய் உள்ளனவா என சோதனைகள் செய்யப்படும். அவா்கள் கொடுக்கும் பாலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நுண்கிருமிகள் உள்ளனவா என்று சோதிக்கப்படும்.

கிருமி நீக்கம் செய்யப்பட்டு, குளிா்சாதனப் பெட்டியில் பால் வைக்கப்படும். பின்னா் மீண்டும் 63 டிகிரி அளவில் கொதிக்க வைக்கப்பட்டு பின்னா் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்குத் தரப்படும். மாவட்டத்தில் எந்த பகுதியில் இருந்தாலும் தாய்ப்பால் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.