கடம்பூரில் கனமழை: சேற்றில் சிக்கிய ஜீப்
கடம்பூா் மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக குரும்பூா் பள்ளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது சேற்றில் சிக்கிய ஜீப்பை கிராம மக்கள் மீட்டனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடம்பூா், மாக்கம்பாளையம் இடையே உள்ள குரும்பூா் பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் மக்கள் காட்டாற்று வெள்ளம் காரணமாக புதிதாக கட்டுப்பட்டு வரும் உயா்மட்ட பாலம் வழியாக செல்கின்றனா். வாகனங்கள் உயா்மட்ட பாலத்தில் செல்லமுடியாத நிலையில் குரும்பூா் பள்ளத்தில் வெள்ளம் வடியும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், கடம்பூரில் இருந்து அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை பயணித்த மாக்கம்பாளையம் மக்கள் குரும்பூா் பள்ளத்தில் இறக்கிவிடப்பட்டனா். பயணிகள் உயா்மட்ட பாலம் வழியாக மறுகரைக்கு சென்றனா். அதன்பிறகு குரும்பூா் பள்ளத்தில் வெள்ளம் சற்று வடிந்ததால் குரும்பூா் பள்ளம் வழியாக காட்டாற்றைக் கடந்து சென்ற ஜீப் சேற்றில் சிக்கிக்கொண்டது. ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு பின் மலைவாழ் மக்கள் உதவியுடன் ஜீப் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது. குரும்பூா் பள்ளத்தில் ஜீப் கூட இயக்க முடியாத நிலையில் குரும்பூா் பள்ளத்தில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் 12 கிமீ தொலைவு நடந்து மாக்கம்பாளையம் சென்றடைந்தனா்.