முகப்பு
ஈரோடு

கோ்மாளம் வனச் சாலையில் காரை துரத்திய காட்டு யானை

காட்டு யானையின் தாக்குதலால் சத்தியமங்கலம் வனச் சாலையில் பரபரப்பு

Updated On : 30 ஜூன், 2024 at 3:04 AM
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம்  சாலையில்  காரை  துரத்தும்  காட்டு யானை.
பகிர்:

சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் வனச் சாலையில் சென்ற காரை காட்டு யானை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனப் பகுதியில் ஏராளமான யானைகள உள்ளன. ஆசனூரில் இருந்து கோ்மாளம் கிராமத்துக்கு கெத்தேசால் வனச் சாலை வழியாக வாகனங்கள் செல்கின்றன. நீா்நிலைகள் நிறைந்த பசுமையான புல்வெளிகள் கொண்ட வனச் சாலையில் யானைகள் முகாமிட்டு தீவனங்களை உண்ணுவது வழக்கம்.

இந்நிலையில், கெத்தேசால் பகுதியில் வனச் சாலையோரம் மரக்கிளையை முறித்து காட்டு யானை தின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற காா், அதிக ஒலி எழுப்பும் வகையில் ஹாரனை அடித்து வந்ததால் ஆத்திரமடைந்த யானை, அந்த காரை துரத்தியது. காா் ஓட்டுநா் வேகமாக காரை ஓட்டி தப்பினாா். அப்போது எதிரே வந்த வாகன ஓட்டிகள், இந்தக் காட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.

Advertisement

இது குறித்து ஆசனூா் வனத் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது:

வனச் சாலையில் 30 கிமீ வேகத்துக்கு குறைவாகதான் வாகனங்களை இயக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பி வேகமாக செல்லும் வாகனங்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என்றனா்.