திம்பம் மலைப் பாதையில் நடமாடிய காட்டு யானை
திம்பம் மலைப் பாதையில் வெள்ளிக்கிழமை நடமாடிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. வனப் பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீா் தேடி காட்டு யானைகள் தமிழக கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன. இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்த திம்பம் மலைப் பாதையில் காட்டு யானை வெள்ளிக்கிழமை சாலை ஓரத்தில் நின்றபடி அங்கும்இங்கும் நடமாடியது. யானையை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் அச்சமடைந்தனா். யானை நடமாட்டத்தை சிலா் தங்களது கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா். திம்பம் மலைப் பாதையில் பகல் நேரங்களிலேயே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறும், மலைப் பாதையில் செல்லும்போது வாகனத்தைவிட்டு கீழே இறங்க வேண்டாம் என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.