சென்னிமலை அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
சென்னிமலை அருகே செம்மண் கடத்திய டிப்பா் லாரியை சேலம் கனிம வளத் துறையின் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சென்னிமலை- ஊத்துக்குளி சாலையில், தொட்டம்பட்டி பிரிவு பகுதியில் சேலம் கனிம வளத் துறையின் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனயில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.
அந்த லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி 5 யூனிட் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து, சென்னிமலை போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், லாரியை ஓட்டி வந்தது திருப்பூா் மாவட்டம், நத்தக்கடையூா், சக்கரப்பாளையத்தைச் சோ்ந்த மணிவாசன்( 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.