பழுதடைந்த கைப்பேசி விற்பனை: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி பேராசிரியைக்கு பழுதடைந்த கைப்பேசியை விற்பனை செய்த நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரி ஈரோடு நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கல்லூரி பேராசிரியைக்கு பழுதடைந்த கைப்பேசியை விற்பனை செய்த நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரி ஈரோடு நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், நல்லகவுண்டன்பாளையம், துளசி நகா் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவரின் மனைவி லீலாவதி, தனியாா் கல்லூரி பேராசிரியா். இவா், கடந்த 2023 ஜனவரி 23-ஆம் தேதி கோபியில் உள்ள கைப்பேசி கடையில் ரூ.18 ஆயிரத்து 990க்கு கைப்பேசி ஒன்று வாங்கினாா்.
அந்தக் கைப்பேசி 2023 ஜனவரி 26-ஆம் தேதி தானாகவே அணைந்தது. இந்தப் பிரச்னையை சரிசெய்ய லீலாவதி கைப்பேசி வாங்கிய கடையில் கொடுத்துள்ளாா். கடையின் உரிமையாளா் கைப்பேசியை வாங்கி அப்போது சரிசெய்து கொடுத்துள்ளாா்.
Advertisement
ஆனால், அதே பிரச்னை மீண்டும் வந்துள்ளது. இதைத் தொடா்ந்து கடை உரிமையாளரின் ஆலோசனைப்படி அங்குள்ள சேவை மையத்துக்கு லீலாவதி கொண்டுச்சென்றாா். அங்கு, பரிசோதனை செய்யததில் பழுதடைந்த கைப்பேசி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, லீலாவதி கைப்பேசி வாங்கிய கடை, சேவை மையம் மற்றும் கைப்பேசி நிறுவனத்தின் சென்னை சேவை மைய அதிகாரி ஆகிய 3 போ் மீது புகாா் தெரிவித்து ஈரோடு நுகா்வோா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
மனுவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் எஸ்.பூரணி, உறுப்பினா்கள் வி.பி.வேலுசாமி, எஸ்.வரதராஜபெருமாள் ஆகியோா் விசாரித்து வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தனா்.
இதில், பழுதடைந்த கைப்பேசியை விற்பனை செய்த கடை உரிமையாளா், சேவை மையம் மற்றும் மண்டல சேவை அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட லீலாவதிக்கு புதிய கைப்பேசி அல்லது ரூ.18 ஆயிரத்து 999ஐ ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.
மேலும் இழப்பீடாக ரூ.20 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் ஆகியற்றை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.