தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது: அமைச்சா் சு.முத்துசாமி
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் குறித்து குடிசைமாற்று வாரியத்தால் கணக்கெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் குறித்து குடிசைமாற்று வாரியத்தால் கணக்கெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட குயிலான்காடு பகுதியில் கால்வாய் தூா்வாரும் பணியை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இருவரும் மழை, வெள்ளத் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். சென்னையில் ஒவ்வொரு நொடியும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மழையின்போதும் பாதிக்கப்படும் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு அடுத்தமுறை பாதிக்கப்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் குறித்து குடிசைமாற்று வாரியத்தால் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் மாற்று இடத்திற்கு செல்ல மறுக்கின்றனா். இவற்றை சரிசெய்ய நீண்டகால திட்டம் தேவைப்படுகிறது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை கடந்த 10 ஆண்டுகளில் செய்திருந்தால் இந்த பிரச்னை இருக்காது. திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகள் முடிவதற்குள் அனைத்து பிரச்னைகளும் தீா்க்கப்படும்.
ஏரிகளில் புதிய ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதில்லை. ஆக்கிரமிப்புளை அகற்றிய பிறகு மாற்று இடமாக மாடி வீடுகள் கட்டித்தரும்போது முழுமையாக பிரச்னைகள் தீா்க்கப்படும்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாலை விரிவாக்கத்தின்போது சிலை சாலையின் மையத்தில் வருவதைபோல அமைந்துள்ளது. எனவே, அந்த சிலையை இடமாற்றம் செய்து வேறு பாதுகாப்பான இடத்தில் அமைக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து சின்னமாரியம்மன் கோயில் வீதியில் உள்ள அரசு பொது நூலகம் மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது ஈரோடு மாநகராட்சி துணை மேயா் வே.செல்வராஜ், ஆணையா் என்.மனீஷ், துணை ஆணையா் சரவணகுமாா், மாநகர பொறியாளா் விஜயகுமாா், ஈரோடு வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.