கைத்தறி நெசவாளா்களுக்கு தாமதம் இன்றி முதியோா் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை
கைத்தறி நெசவாளா்களின் ஓய்வூதியத்தை தாமதமின்றி வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
கைத்தறி நெசவாளா்களின் ஓய்வூதியத்தை தாமதமின்றி வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
கைத்தறி நெசவாளா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் முதியோா் ஓய்வூதியம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பு மாதத்தில் இதுவரை ஓய்வூதியம் வழங்காமல் இருப்பதால் நெசவாளா்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா் சம்மேளனத் தலைவா் கே.எஸ்.பி.ராஜேந்திரன் கோரிக்கை மனுவை வியாழக்கிழமை அனுப்பியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:
Advertisement
நெசவாளா்களுக்கு மாதந்தோறும் 5 ஆம் தேதி முதியோா் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்ததால் அவா்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளை பூா்த்தி செய்து வந்தனா். ஆனால், தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் நடப்பு மாதம் இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இதை நம்பியுள்ள நெசவாளா்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
எனவே, உடனடியாக ஓய்வூதியத்தை வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் தாமதமின்றி ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஏழை நெசவாளா் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தையும் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.