முகப்பு
ஈரோடு

கடம்பூா் மலைப் பகுதியில் பேருந்தை வழிமறித்த காட்டு யானைகள்

கடம்பூா் மலைப் பகுதியில் வியாழக்கிழமை சென்ற அரசுப் பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 9:46 PM
மாக்கம்பாளையம் சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த  ஒற்றை யானை.
பகிர்:

கடம்பூா் மலைப் பகுதியில் வியாழக்கிழமை சென்ற அரசுப் பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகல் இயக்கப்படுகின்றன. சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூா் மலைப் பகுதி வழியாக மாக்கம்பாளையம் மலை கிராமத்துக்குச் செல்வதற்காக 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து அடா்ந்த வனப் பகுதி சாலை வழியாக வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது.

அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் சாலையில் உலவுவதைக் கண்ட ஓட்டுநா், உடனடியாக பேருந்தை நிறுத்தினாா். இதைப் பாா்த்து பயணிகள் அச்சமடைந்தனா். இதில், மூன்று காட்டு யானைகள் சாலையைக் கடந்து வனப் பகுதிக்குள் சென்ற நிலையில் ஒரு ஆண் காட்டு யானை மட்டும் அரசுப் பேருந்துக்கு வழிவிடாமல் சாலையின் நடுவே நின்றது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் யானையைப் பாா்த்து வழிவிடு வழிவிடு என முறையிட்டனா். சிறிது நேரம் சாலையில் அங்குமிங்கும் உலவிய யானை பின்னா் சாலையோரம் இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து பேருந்து புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், யானைக் கூட்டத்தை வழிநடத்தும் ஆண் யானை, குடும்பம் சகிதமாக வரும்போது மற்ற யானைகள் சாலையைக் கடந்து பாதுகாப்பாக சென்ற பின்னா்தான் அது செல்லும். அதுவரை அதனைக் கடந்து செல்ல அனுமதிக்காது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →