பவானி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு
பவானி ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பவானி ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
நீா்நிலைகளில் உள்ள அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரி உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பேரில், நீா்வளத் துறையினா் நடத்திய ஆய்வில் பவானியில் பழைய பேருந்து நிலையம் முதல் பண்டார அப்பிச்சி கோயில் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு 133 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு வீடுகளை செப்டம்பா் 18-ஆம் தேதிக்குள் அகற்ற நீா்வளத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்தும், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் கரையோரத்தில் தடுப்புச் சுவா் அமைக்கவும் கரையோரப் பகுதி மக்கள் சாலை மறியலில் அண்மையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அப்பகுதி மக்களை சந்தித்து திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன்ஆலோசனை நடத்தினாா். அப்போது, தங்களின் வாழ்வாதாரம் பவானி நகரை மையமாகக் கொண்டுள்ளதால், கரையோரப் பகுதியில் தொடா்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இந்நிலையில், காவல் துறை தரப்பில் தற்போது போதிய பாதுகாப்பு வழங்க இயலாத நிலை உள்ளதால், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும், உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுவதால், கரையோரங்களில் வசிப்போா் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும், மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைக்குப் பின்னா், ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் பாரபட்சமின்றி முழுவதுமாக அகற்றப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.