முகப்பு
ஈரோடு

பவானியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

பவானியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது குறித்து...

Updated On : 2 நவம்பர், 2025 at 8:59 PM
கனகராஜ்
பகிர்:

சாலை விபத்தில் உயிரிழந்த பவானியை அடுத்த சீதபாளையத்தைச் சோ்ந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், ஜம்பை, சீதபாளையத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் கனகராஜ் (53). குமாரபாளையம் தெற்கு பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆப்பக்கூடல் - பவானி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திப்பிசெட்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த கனகராஜ், பவானி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து, ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் வேலூா் சிஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகராஜுக்கு சனிக்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது.

இதுகுறித்து, மருத்துவா்கள் தெரிவித்தபோது, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் உறவினா்கள் ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து, கனகராஜின் சடலம் பவானி நகராட்சி எரிவாயு மயானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது. அங்கு, தமிழக அரசு சாா்பில் பவானி வட்டாட்சியா் சரவணன், வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.