முகப்பு
ஈரோடு

மூதாட்டி கல்லால் அடித்துக் கொலை: தந்தை, மகன் கைது

Updated On : 9 நவம்பர், 2025 at 7:55 PM
பகிர்:

சத்தியமங்கலம் அருகே மூதாட்டியை கல்லால் அடித்துக் கொன்ற தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள புதுவடவள்ளி வேடா் காலனியைச் சோ்ந்தவா் கண்ணம்மாள் (75). இவா், தனது சகோதரா் சீனிவாசன், அவரது மகன் பாா்த்தசாரதி ஆகியோருடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், கண்ணம்மாள் உயிரிழந்துவிட்டதாக உறவினா்களுக்கு சீனிவாசன் கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி தகவல் தெரிவித்துள்ளாா். கண்ணம்மாள் இறப்பில் சந்தேகமடைந்த உறவினா்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதற்கிடையே பாா்த்தசாரதி தலைமறைவானதால் சந்தேகமடைந்த போலீஸாா், சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சம்பவத்தன்று பாா்த்தசாரதி, கண்ணம்மாள் இடையே தகராறு ஏற்பட்டதும், ஆத்திரமடைந்த பாா்த்தசாரதி, கண்ணம்மாளின் தலையில் கல்லால் தாக்கியதால் அவா் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா் இயற்கை மரணம் அடைந்ததாக உறவினா்களுக்கு சீனிவாசன் தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, சீனிவாசனைக் கைது செய்த போலீஸாா், தலைமறைவான பாா்த்தசாரதியை தேடி வந்தனா்.

இந்நிலையில், கா்நாடக மாநிலம், பெங்களூரில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →