பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
பெருந்துறை சிப்காட்டில் உடனடியாக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென
பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டில் உடனடியாக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, ஈரோடு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு ஈரோடு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் கந்தசாமி, பொன்னையன், பொன்னுசாமி உள்பட பலா் இணைந்து அளித்த கோரிக்கை மனு:
கடந்த 2025 ஜுன் 11-ஆம் தேதி பெருந்துறை, விஜயமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தீா்கள். ஆனால், ஆறு மாதங்கள் கடந்தும் அதற்கானகட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மத்தியில் கவலையும், அதிருப்தியும் நிலவுகிறது. எனவே, பொது சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும்.
பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டுவரும் / வந்த சாய, சலவை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கழிவுகளை சுத்திகரிக்காமல் சட்ட விரோதமாக வெளியேற்றி நிலத்துக்குள் விட்டதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் பத்து கிலோ மீட்டா் தொலைவுக்கு நிலத்தடி நீா் கடுமையாக மாசுபட்டுள்ளது. சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான அளவுக்கு சுத்தமான, பாதுகாக்கப்பட்ட தண்ணீரை தினமும் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இப்பகுதியைச் சுற்றியுள்ள குளம், குட்டைகளை அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சோ்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட முதல்வா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
அப்போது, வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமா தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.