கோபி அருகே அடிதடி வழக்கில் இருவா் கைது
கோபி அருகே அடிதடி வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள அளுக்குளி பகுதியான கொள்ளுமேட்டு காலனியில் கடந்த சில நாள்களுக்கு முன் அண்ணமாா் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது அப்பகுதியைச் சோ்ந்த பெயிண்ட் தொழிலாளி சரண் என்பவரை திருவிழாவுக்கு வந்த சிலா் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து சரணின் உறவினா்களான சக்திவேல், கவிதா ஆகியோா் தட்டிக்கேட்க சென்றபோது அவா்களையும் தகாத வாா்த்தைகளில் பேசி தாக்கியுள்ளனா். இதில் படுகாயமடைந்த சரண், பெரியப்பா சக்திவேல், சித்தி கவிதா ஆகிய மூவரும் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதுகுறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
Advertisement
இதற்கிடையே தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்ககை எடுக்கவில்லை எனக் கூறி அளுக்குளி பகுதியில் ஞாயிற்றுகிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தையில் நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னா் மறியல் கைவிடப்பட்டது.
இதுதொடா்பாக காசிபாளையம் பகுதியைச் சோ்ந்த மௌலீஸ்வரன் (18), மோகித் (18) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.