திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்
திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
ஈரோட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தமிழக தோ்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
முதல்வா் ஸ்டாலின் குடும்பத்தினா் நிலம், மணல், அரசு வேலை, போக்குவரத்து துறை, டாஸ்மாக் உள்ளிட்டவற்றில் ஊழல் செய்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனா். அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி பலமாக உள்ளது. எங்களின் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வர முடியாது.
Advertisement
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கு பாஜக, திமுகதான் காரணம் என விஜய் கூறியதாகத் தெரிகிறது. பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான படங்கள் திரைப்படத் தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. திரைப்பட தணிக்கை துறை தன்னாட்சி அதிகாரம் பெற்றதே தவிர மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இது புரிதல் இல்லாத குற்றச்சாட்டு.
இதன்மூலமாக அரசு எப்படி செயல்படுகிறது என்றே அவருக்குத் தெரியவில்லை. மக்கள் அனைவரும் விஜய்யை திரைப்பட நட்சத்திரமாகதான் பாா்க்கின்றனா். தமிழகத்தில் அமிதாப் பச்சன், ஷாருக் கான் வந்தாலும் மக்கள் கூடுவாா்கள். கடந்த காலங்களில் சிவாஜி கணேசன், விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோா் திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளனா். இவா்கள் சிறந்த திரைப்பட நட்சத்திரங்கள், ஆனால் அரசை நடத்துவதற்கான அனுபவம் இல்லை.
தவெக - திமுக இடையே போட்டி எனக்கூறுவது கனவு. நல்லவா்கள் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும். தமிழ் கலாசாரம் மீது மரியாதை உள்ளது. மிகவும் பழமையானது தமிழ் மொழி. செங்கோலை அருங்காட்சியகத்தில் காங்கிரஸ் வைத்திருந்தது. பிரதமா் மோடி தான் சரியான இடத்தில் வைத்துள்ளாா்.
உதயநிதி ஸ்டாலின் சநாதன தா்மத்தை மலேரியா, டெங்கு என விமா்சித்துள்ளாா். தற்போது தோ்தல் வருவதால் திமுகவினா் கோயிலுக்கு செல்கின்றனா். போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க முடியாமல் முதல்வா் ஸ்டாலின் உள்ளாா். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போதைப்பொருள் புழக்கத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவோம் என்றாா்.
முன்னதாக மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.கிருத்திகா, ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்தாா்.