திமுக ஆட்சியில் ரூ. 4,700 கோடி ஊழல்; 8,900 கொலைகள்! - பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 4,700 கோடி ஊழல் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதைப் பற்றி...
திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 4,700 கோடி ஊழல் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இன்று மாலை தமிழகம் வந்தார்.
சென்னை கமலாலயத்தில் பியூஷ் கோயல் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் பேசுகையில், “திமுக ஆட்சியின் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரித்திருப்பதை நாங்கள் கண்டபோது, அதிர்ச்சியடைந்தோம்.
வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2022 ஆம் ஆண்டில் 4,968 போக்சோ வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், சமீபத்திய தரவுகளின்படி 2024 ஆம் ஆண்டில் 6,969 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
திமுகவில் உள்ள கவுன்சிலர்களும், இளைஞரணித் தலைவர்களுமே பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். ஆனால், திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் குற்றவாளிகளுடன் சேர்ந்து செயல்படுகின்றனரா?
தமிழகத்தில் திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் நடந்த ஊழலின் அளவு என்பது, தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு கொள்ளை சம்பவமாக அமைந்திருக்கிறது. சட்டவிரோத மணல் கடத்தல் மூலமாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 4700 கோடி ஊழல் செய்து திமுகவினர் ஒரு ஊழல் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியிருக்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக-காங்கிரஸ் ஆட்சியில், 8,900 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுவரை, 32 பேர் காவல் நிலையத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், திமுக ஆட்சியில் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.
நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஸ்டாலினின் குடும்ப ஆட்சியின் கீழ் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது. தமிழ்நாட்டு மக்கள் இதை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.