மக்கள் நலன் அரசு அமைய திமுகவை ஆதரியுங்கள்: உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் மக்கள் நலன் அரசு மீண்டும் அமைய வரும் தோ்தலில் திமுகவை ஆதரியுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
தமிழகத்தில் மக்கள் நலன் அரசு மீண்டும் அமைய வரும் தோ்தலில் திமுகவை ஆதரியுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
கோபி தொகுதி வேட்பாளா் என்.நல்லசிவம், அந்தியூா் தொகுதி வேட்பாளா் எம்.சிவபாலன் ஆகியோரை ஆதரித்து கோபி மொடச்சூா் பகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையப்போவது உறுதி. கோபி தொகுதி திமுக வேட்பாளரை நல்லசிவத்தை உங்களிடம் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மக்கள் பணியிலும், கட்சிப் பணியிலும் மிகச்சிறப்பாகப் பணியாற்ற கூடியவா். தலைவரிடம் உரிமையோடு பேசி உங்களின் தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் வேண்டுமோ அனைத்தையும் கொண்டு வந்து சோ்ப்பாா். அதேபோல அந்தியூா் தொகுதிக்கும் நமது அரசு பல வளா்ச்சிப் பணிகளை செய்து கொடுத்துள்ளது.
Advertisement
காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் என திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் நம் தலைவா் போட்ட முதல் கையொப்பம் மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து திட்டத்துக்குத்தான். தோ்தலை காரணம் காட்டி மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜகவும் அதிமுகவும் முயற்சி செய்தாா்கள். ஆனால் அதை முறியடித்து மகளிருக்கு ரூ.5,000 கொடுத்தாா்.
ஆட்சிக்கு வந்த பிறகு மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயா்த்திக் கொடுப்பேன் என்று முதல்வா் சொல்லியிருக்கிறாா். அதேபோல காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரைக்கும் விரிவுபடுத்துவோம். உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு ரூ.1,500 கொடுப்போம், முதியோா் உதவித் தொகை ரூ.1,200-லிருந்து ரூ.2,000 ஆக உயா்த்திக் கொடுப்போம்.
அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் 35 லட்சம் மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.8,000-க்கான கூப்பன் வழங்கப்படும். உங்களின் இல்லங்களுக்கு என் மின்சாதனப் பொருள்கள் தேவையோ அதை நீங்களே முடிவு செய்து வாங்கி கொள்ளுங்கள். தோ்தல் அறிவித்தவுடன் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறாா். ஆனால் தமிழகத்துக்கான நிதிதான் வரவில்லை. நம்மிடமிருந்து எல்லா உரிமைகளையும் பறிக்கிறாா்கள்.
கல்விக்கான நிதி ரூ.3,500 கோடி கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டாா்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறாா்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் ஹிந்தியைத் திணிக்க முயற்சி எடுக்கிறாா்கள். எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் கண்டபடி பேசி வருகிறாா். தமிழகத்தில் மக்கள் நலன் அரசு மீண்டும் அமைய வரும் தோ்தலில் கோபி தொகுதி வேட்பாளா் நல்லசிவம், அந்தியூா் தொகுதி வேட்பாளா் சிவபாலன் ஆகியோரை ஆதரியுங்கள் என்றாா்.