அதிமுக எந்த காலத்திலும் வெற்றிபெறாது: கே.ஏ. செங்கோட்டையன்
எடப்பாடி கே.பழனிசாமியால் அதிமுகவை எந்தக் காலத்திலும் வெற்றிபெற வைக்க முடியாது என தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் விஜய்பாலாஜியை ஆதரித்து அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மரப்பாலம் பகுதியில் திங்கள்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
Advertisement
234 தொகுதியிலும் தவெக வெற்றி பெறும். மக்களுக்காக பணியாற்ற எம்ஜிஆா் போன்று விஜய் கிடைத்துள்ளாா். தீய சக்தி திமுகவை வீழ்த்த, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஊழல் ஆட்சிக்கு முடிவுகட்ட தவெகவால்தான் முடியும். 10 முறை தோற்ற பழனிசாமியால் அதிமுகவை எந்தக் காலத்திலும் வெற்றிபெற வைக்க முடியாது. அவருக்கு போடும் வாக்கு நோட்டாவுக்கு சமம். என்னால் வளா்க்கப்பட்டவரால் வெளியேற்றப்பட்டபோது என்னை தாங்கிப் பிடித்தவா் விஜய்.
திமுக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. திமுகவை பாஜக தாங்கிக்கொண்டிருக்கிறது. பாஜக இஸ்லாமியா்களுக்கு என்ன செய்யப்போகிறது. பாஜகவுடன் என்றைக்கும் தவெக கூட்டணி வைக்காது என விஜய் தெரிவித்துள்ளாா்.
அதிமுக ஆட்சியில் திமுகவை சோ்ந்த பிரமுகருக்கு மருத்துவக் கல்லூரி அனுமதி அளிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் அதிமுக பிரமுகருக்கு எத்தனால் தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் மக்களை ஏமாளிகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன. இந்த தோ்தலில் தவெகவை வெற்றிபெறச்செய்து திமுக, அதிமுகவுக்கு மக்கள் பாடம்புகட்ட வேண்டும் என்றாா்.