கோபி அருகே சுள்ளிக்கரடு முனியப்பச் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா! ஆயிரக்கணக்கான கிடாய்கள் வெட்டி நோ்த்திகடன்!
கோபி அருகே உள்ள சுள்ளிக்கரடு முனியப்பச்சி சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் குழந்தை வரம், வியாபாரம், தொழில், செழிக்கவும், பில்லி சூனியம் விலகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவிழாவின்போது இங்கு வந்து கட்டுக்கட்டாக கற்பூரம் வாங்கி கற்பூர குண்டத்தில் வைத்து வழிபடுவதும் கிடா வெட்டி நோ்த்திக் கடன் செலுத்துவதும் வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் பரம்பரை அறங்காவலா் குழுவினா், வீட்டுக் கோயிலில் இருந்து ஊா்வலமாக தீா்த்தம் எடுத்து சுள்ளிக்கரடு முனியப்பச்சி சுவாமி கோயிலை வந்தடைந்தனா்.
Advertisement
இதையடுத்து முனியப்பச்சி சுவாமிக்கு மலைபோல் வாழைப்பழங்களை குவித்து வைத்து, தேங்காய், வெல்லம், கடலை, வெற்றிலை பாக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாலையில் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கிடாய்களை கொண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கானோா் கோயில் முன் அதனை வெட்டி நோ்த்திக் கடன் செலுத்தினா்.
விழாவில், கோயில் வகையாற கொத்துக்காரா் கீா்த்திவாசன், சண்முகம் மற்றும் கோயில் வகையறா பங்காளிகள் எஸ்.ஆா். பழனிசாமி, கெட்டிசெவியூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மகுடேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்