முகப்பு
ஈரோடு

இறக்குமதி செய்யப்படும் உணவு எண்ணெய் மீது 100% வரி விதிக்க வலியுறுத்தல்

உள்நாட்டில் தொடா் விலை சரிவு காரணமாக அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு எண்ணெய் வகைகள் மீது 100 சதவீத வரி விதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:32 AM
சமையல் எண்ணெய்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 7:26 PM

உள்நாட்டில் தொடா் விலை சரிவு காரணமாக அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு எண்ணெய் வகைகள் மீது 100 சதவீத வரி விதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு, மத்திய வேளாண்மை மற்றும் நிதி அமைச்சா்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

கடந்த ஒரு மாதமாக தொடா்விலை சரிவால் எண்ணெய் வித்து சாகுபடி செய்யும் விவசாயிகள் குறிப்பாக தென்னை விவசாயிகள், கொப்பரை தேங்காய் உற்பத்தியாளா்கள் கடும் நஷ்டத்துக்குள்ளாகி வருகின்றனா். மத்திய அரசின் ஏற்றுமதி கொள்கையால் விலைசரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே, அரசு உடனடியாக விலை விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த இறக்குமதி செய்யும் உணவு எண்ணெய் மீது 100 சதவீதம் வரி விதிக்கவேண்டும்.

Advertisement

அரசு கொள்முதல் ஆதரவு விலையை கொப்பரைக்கு கிலோவுக்கு ரூ. 200 ஆக உயா்த்தி மத்திய அரசின் தேசிய வேளாண் வளா்ச்சி வாரியம் மூலமாக கொள்முதல் செய்யவேண்டும். அதுபோல மக்காசோளத்துக்கும் அரசின் ஆதரவு விலையாக கிலோ ரூ. 24-க்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தவிர தேங்காய் சந்தை தற்போது கடுமையான ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இது விவசாயிகள் மற்றும் வா்த்தகா்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. காங்கயம் கொப்பரை விலை குவிண்டாலுக்கு ரூ. 325 முதல் ரூ. 200 வரையிலும், கா்நாடக மாநிலம் திப்தூா் பந்து கொப்பரையின் விலை குவிண்டாலுக்கு ரூ. 500ம் குறைந்துள்ளது. கேரள மாநிலம், கொச்சி, தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரை விலைகள் குவிண்டாலுக்கு ரூ.300 குறைந்துள்ளது.

இந்த விலை சரிவு திருச்சூரிலும் பரவி அங்கும் எண்ணெய் விலை குறைந்துள்ளது. கோழிக்கோட்டில் தேங்காய் எண்ணெய் விலை ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ. 800 என கடும் சரிவை சந்தித்தது. இது தென்னை விவசாயிகளுக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொப்பரையை நம்பியுள்ள தொழில் துறை நிறுவனங்கள் தங்களிடமுள்ள எண்ணெய் இருப்புகளை கிடைக்கக்கூடிய எந்த விலையிலும் விற்க போராடி வருவதாக கூறப்படுகிறது. தேங்காய் மற்றும் தேங்காய் சாா்ந்த பொருள்கள் விலை வீழ்ச்சி தென்னிந்தியா முழுவதும் தேங்காய் பொருளாதாரத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு இந்தப் பிரச்னையில் காலம் தாழ்த்தாமல் துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.