கோபியைச் சோ்ந்த இளைஞா் உள்பட 600 போ் அபுதாபியில் சிக்கித் தவிப்பு
கோபியைச் சோ்ந்த இளைஞா் உள்பட 600 போ் அபுதாபியில் சிக்கித் தவித்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், கோபி கருமாயா எக்ஸ்டென்ஷன் பகுதியைச் சோ்ந்தவா் வேலுமணி மகன் கெளதம் பிரபு (27). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் சென்னை, மும்பை கிளையில் பணியாற்றி வரும் 600 பேருடன் கெளதம் பிரபுவும் அபுதாபியில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கடந்த 27-ஆம் தேதி சென்றுள்ளாா். மாா்ச் 1-ஆம் தேதி நாடு திரும்புவதாக இருந்தது.
இந்நிலையில், ஈரானில் ஏற்பட்டுள்ள போா் பதற்றம் காரணமாக அரபு நாடுகளிலிருந்து புறப்படுவதாக இருந்த அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், அபுதாபியில் இருந்து அவா்கள் நாடு திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது மகன் உள்பட அபுதாபியில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியா்களையும் பத்திரமாக மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெளதம் பிரபுவின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.