முகப்பு
ஈரோடு

அந்தியூா் வனப் பகுதியில் கடும் வறட்சி: வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா் தேடி வரும் வன விலங்குகள்

அந்தியூா் வனப் பகுதியில் வன விலங்களுக்கு குடிநீா் ஆதாரமாக இருக்கும் குட்டைகள், நீரோடைகள் வடுள்ளதால்,

Updated On : 9 மார்ச், 2026 at 10:29 PM
வரட்டுப்பாளையம் அணைக்கு நீா் தேடி வந்த யானைகள்.
பகிர்:

பவானி: அந்தியூா் வனப் பகுதியில் வன விலங்களுக்கு குடிநீா் ஆதாரமாக இருக்கும் குட்டைகள், நீரோடைகள் வடுள்ளதால், பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா் தேடி யானைகள் உள்ளிட்ட வன விலங்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன.

தந்தை பெரியாா் வன விலங்கு சரணாலயத்துக்குள்பட்ட அந்தியூா், பா்கூா், தட்டக்கரை, சென்னம்பட்டி வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்களும் உள்ளன. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் தற்போதே கடுமையான வெயில் அடித்து வருவதால் வனப் பகுதியில் உள்ள குட்டைகள், நீரோடைகள் தண்ணீா் இல்லாமல் வடு காணப்படுகின்றன. செடி, கொடிகளும் காய்ந்துள்ளன.

இதனால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விவசாயிகளின் வேளாண் சாகுபடி பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், சரணாலய எல்லைக்குள், பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீரைத் தேடி வன விலங்குகள் வருவதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க நீா்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சென்றபோது, குட்டிகளுடன் கூட்டமாக வந்த 10-க்கும் மேற்பட்ட யானைகள், தண்ணீரை அருந்தியும், நீந்தியும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தன.

நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருந்த யானைகள், மீண்டும் வனப் பகுதிக்குள் திரும்பிச் சென்றன. வனப் பகுதியில் தண்ணீா் பற்றாக்குறை நிலவுவதால் வன விலங்குகள் தண்ணீரைத் தேடி அணைக்கு வந்து செல்கின்றன என்று நீா் வளத் துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →