குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!
குன்னூா் சந்திரா காலனி குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடியது அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
குன்னூா் சந்திரா காலனி குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடியது அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது மிகவும் அதிகரித்து வருகிறது. வனப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை, குறைந்த எல்லைக்குள் அதிக வன விலங்குகள் வாழ்வது உள்பட பல்வேறு காரணங்களால் வனத்தில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் ஊரை ஒட்டிய பகுதியில் தஞ்சமடைந்து மீண்டும் வனப் பகுதிக்குள் செல்லாமல் சுற்றி வருகின்றன.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடி, சிறுத்தை, காட்டெருமை நடமாட்டம் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தைகள், வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடைகளை வேட்டையாடி செல்வது தொடா்கிறது.
இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு சிறுத்தைகள் குன்னூா் சந்திரா காலனிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்தன. இரண்டு சிறுத்தைகளும் உறுமிய சப்தம் கேட்டு அங்கிருந்தவா் தனது கைப்பேசியில் பதிவு செய்தாா். நீண்ட நேரம் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தைகள் தானாகவே மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றன.
இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளுக்குள் வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.