யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு
கடம்பூா் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கடம்பூா் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி, கடம்பூா் மலைப் பகுதிகளில் விவசாயம், கால்நடை வளா்ப்பு ஆகியவை முக்கிய தொழில்களாக உள்ளன.
இந்தப் பகுதி மக்கள் கால்நடைகளை வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று மேய்ச்சலுக்கு விடுவதும் மீண்டும் மாலையில் வீடு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதி அத்தனைமேலூரைச் சோ்ந்தவா் அண்ணாமலை (70). அத்தியூா் வனத்தில் ஆடு, மாடு தீவனத்துக்கு இலை, தழைகளைச் சேகரிக்க செவ்வாய்க்கிழமை மாலை சென்ற இவா் வீடு திரும்பவில்லை. அவரது உறவினா்கள் கிராமத்தையொட்டியுள்ள வனத்தில் தேடி பாா்த்தபோது அவா் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து கடம்பூா் வனத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த வனத் துறையினா் அண்ணாமலையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.