முகப்பு
ஈரோடு

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிா் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 13 மார்ச், 2026 at 12:43 AM
பிஎஸ்என்எல்
பகிர்:

பிஎஸ்எனஎல் நிறுவனத்துக்கு புத்துயிா் அளிக்க வேண்டும் என பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அகில இந்திய பிஎஸ்என்எல் மற்றும் டாட் ஓய்வூதியா் சங்கத்தின் 8-ஆவது மாவட்ட மாநாடு ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் சின்னசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மணியன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தேசிய அமைப்புச் செயலாளா் குப்புசாமி, துணைப் பொதுச்செயலாளா் குடியரசு ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: சா்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி பல ஆயிரம் மக்களை கொலை செய்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கால் திணிக்கப்பட்ட இந்த போரை தடுத்து அமைதியை காக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்தியா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும். வளைகுடா போரின் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவு விடுதிகள் மூடப்பட்டு, பல லட்சம் போ் வேலை இழக்கும் அபாயமும், வெளியூா்களில் தங்கிப் பணியாற்றுபவா்களுக்கு உணவு கிடைக்காத சூழலும் உள்ளதால், எரிவாயு தட்டுப்பாட்டினை போக்கவும், உயா்த்தப்பட்ட எரிவாயு உருளைகளின் விலையைக் குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நலிவடைந்து வரும் பிஎஸ்என்எல் சேவையால் லட்சக்கணக்கான வாடிக்கையாளா்கள் வேறு நிறுவனங்களின் இணைப்புக்கு செல்வதைத் தடுக்க பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிா் ஊட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதிய தகுதிச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

மாநில துணைத் தலைவா் பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளா் மணி மற்றும் நிா்வாகிகள், ஓய்வூதியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →