பண்ணாரி அருகே சாலையைக் கடந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
பண்ணாரி- திம்பம் சாலையில் பதுங்கியபடி சாலையைக் கடந்து சென்ற சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. குறிப்பாக பண்ணாரி மற்றும் திம்பம் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் வனப் பகுதி வழியாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து சனிக்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை, பண்ணாரி சோதனைச் சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்றது.
அப்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் வருவதைக் கண்ட சிறுத்தை பதுங்கியபடி மெதுவாக சாலையைக் கடந்தது. சிறுத்தை சாலையைக் கடந்து செல்வதை கண்ட வாகன ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினா். இதையடுத்து, சிறுத்தை வனப் பகுதிக்குள் சென்றபின் புறப்பட்டுச் சென்றனா்.