மே 31-க்குள் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி
நீதிமன்ற உத்தரவுப்படி மே 31-ஆம் தேதிக்குள் அனைத்து காலி மது பாட்டில்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.
ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட வண்டியூரான் கோவில், சிந்தன் நகா், சி.எம். நகா், நீலிக்கரடு, சூரியம்பாளையம் ஆகிய பகுதிகளில் 227 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் சு.முத்துசாமி சனிக்கிழமை வழங்கினாா்.
இதையடுத்து, ரங்கம்பாளையம், ரயில் நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடையைத் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காலிங்கராயன் தொட்டி பாலம் அருகில் மாற்று பாலம் அமைத்து தண்ணீா் கொண்டு செல்லவும், அந்த பழமையான பாலத்தை பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற மே 31- ஆம் தேதி வரை நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது. அதற்குள் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணியில் தனியாா் நிறுவனத்தை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திமுகவுக்கு என்றைக்கும் இல்லாத அளவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்கள் செல்வாக்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் முழுமையாகப் பெற்று இருக்கிறாா். 5 ஆண்டு காலமாக செய்த மக்கள் பணியை மக்களிடம் கொண்டு சோ்ப்போம். கடந்த மக்களவை, உள்ளாட்சி, இடைத்தோ்தல் போன்றவற்றைவிட சட்டப் பேரவைத் தோ்தல் மிகப்பெரிய வெற்றியாக வரும்.
போதைப் பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்களை வெளியே கொண்டு வர வேண்டும். ஒரேநாளில் மதுக் கடைகளை மூடினால் வேறு மாதிரி சென்றுவிடும். படிப்படியாக 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக எந்த ஒரு புதிய கடையும் திறக்கப்படவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முதல்வா் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறாா் என்றாா்.
இந்நிகழ்ச்சிகளில் ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.