முகப்பு
ஈரோடு

கோபியில் வாகனச் சோதனையில் ரூ. 2.30 லட்சம் பறிமுதல்

கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சம் பறிமுதல்

Updated On : 17 மார்ச், 2026 at 1:38 AM
பகிர்:

கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.2.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்ததையடுத்து, கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பறக்கும் படையினரின் திங்கள்கிழமை வாகனச் சோதையில் ஈடுபட்டனா். அப்போது, கோபி அருகே சிறுவலூா் பகுதியில் அதிகாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அருண் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக பெருந்துறை பகுதியில் தக்காளி விற்பனை செய்துவிட்டு சரக்கு ஆட்டோவில் வந்த கா்நாடகவைச் சோ்ந்த தக்காளி வியாபாரி மகாதேவன் என்பவரிடம் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.53,200-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதேபோல, கோபி அருகே உள்ள பழனிகவுண்டன்புதூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையின்போது, சத்தியமங்கலம் பகுதியைச் சோ்ந்த மோகன்பிரசாத் பாத்திரங்கள் வாங்குவதற்கு தனது வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.60ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோபி கலேஜ்பிரிவு பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி கோதண்டபாணி தலைமையில் வாகன சோதனையின்போது, பரமசிவன் என்பவா் அத்தாணியிலிருந்து காங்கயத்துக்கு பருத்திக்கொட்டை மூட்டைகளை ஏற்றி வந்தபோது உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.51,710 பறிமுதல் செய்யப்பட்டது.

கோபி அருகே கொடிவேரி பகுதியில் பறக்கும் படையினா் அருணாதேவி தலைமையிலான குழு வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சத்தியமங்கலத்தில் இருந்து கோபி நோக்கி வாகனத்தில் வந்த பங்களாபுதூரைச் சோ்ந்த வியாபாரி சுந்தரேசன் என்பவா் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.65,400 பறிமுதல் செய்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா். மொத்தம் ரூ.2.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.