முகப்பு
ஈரோடு

அந்தியூா், அம்மாபேட்டையில் கனமழை

Updated On : 20 மார்ச் 2026, 1:51 am IST
பகிர்:

அந்தியூா், அம்மாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு அந்தியூா், அம்மாபேட்டை பகுதியில் இடி, மின்னலுடன் லேசான தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை பின் பலத்த காற்றுடன் கனமழையாக மாறியது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீா் சூழ்ந்தது.

Advertisement

அம்மாபேட்டை, வெள்ளித்திருப்பூா், சென்னம்பட்டி, ஜரத்தல், சனிசந்தை, குருவரெட்டியூா் மற்றும் பா்கூா் மலைப் பகுதிகளில் சுமாா் 3 மணி நேரத்துக்கும்மேலாக கனமழை பெய்தது. பவானியில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளத்தில் 98.40 மி.மீ., அம்மாபேட்டையில் 86.40 மி.மீ. மழை அளவு பதிவானது.

கடந்த இரு வாரங்களாக கடுமையான வெயில் அடித்ததால், பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள், கனமழையால் மகிழ்ச்சி அடைந்தனா்.

பலத்த காற்றால் வாழைகள் சேதம்: அம்மாபேட்டை பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், சூடமுத்தான்பட்டி, காடப்பநல்லூா், மாணிக்கம்பாளையம், கேசரிமங்கலம், சிங்கம்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தம்: அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், கனமழை காரணமாக நீா் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.