சொன்னார்களே... செய்தார்களா..?
ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியின் நிலைக் குறித்து...
அத்திக்கடவு அவிநாசி திட்ட நீரேற்று நிலையம் ஈரோடு மேற்குத் தொகுதியில்தான் தொடங்குகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டப் பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே செயல் பாட்டுக்கு வந்தது. ஆனால், இப்போது வரை பெரும்பாலான குளங்களுக்குத் தண்ணீர் செல்லவில்லை.
ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்தில் ஈரோடு மேற்குத் தொகுதியில் உள்ள மாநகராட்சி வார்டுகளுக்கு 50 சதவீதம் பகுதிகளுக்குகூட குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் சென்னிமலை சாலையை மேம்படுத்தும் பணிகளை 4 ஆண்டுகளாகச் செய்யாமல் அவசரகதியில் இப்போதுதான் தொடங்கி உள்ளனர்.
ஈரோடு ரங்கம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலம் அகலப்படுத்தப்படும் என 2021 தேர்தலின்போது திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்தப் பணி தொடங்கப்படவில்லை.
ஈரோடு மேற்குத் தொகுதியில் அரசு சட்டக் கல்லூரி, பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது.
இந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஈரோடு மேற்குத் தொகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படவில்லை. வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என தேர்தலின்போது வாக்குறுதி அளித்த திமுக. 10 சதவீதம் பேருக்குகூட பட்டா வழங்கவில்லை.
இதனால் இந்தத் தொகுதி மக்கள் பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் ஈரோடு மேற்குத் தொகுதியில் குறிப்பிடும்படி எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.