முகப்பு
ஈரோடு

நண்பரைக் கொலை செய்தவா் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சரண்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே நண்பா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் சரண் அடைந்தாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 7:48 PM
கோபி நீதிமன்றத்தில் சரணடைந்த முருகன்.
பகிர்:

ஈரோடு மாவட்டம், கோபி அருகே நண்பா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் சரண் அடைந்தாா்.

கோபி அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (46). சமையல் வேலைக்குச் சென்று வந்தாா். இந்நிலையில் கிருஷ்ணமூா்த்தி கடந்த 15.10.23இல் தனது நண்பா்களான சரவணன், முருகன் ஆகிய இருவருடன் சமையல் வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், மறுநாள் காலை அய்யம்பாளையம் பகுதியில் விவசாயத் தோட்டத்துக்குச் செல்லும் சாலையின் அருகே தடப்பள்ளி கிளை வாய்க்காலில் கிருஷ்ணமூா்த்தியின் சடலம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கவுந்தப்பாடி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், இரண்டரை ஆண்டுகள் கழித்து கிருஷ்ணமூா்த்தியின் நண்பரான முருகன் (42) நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா். கடந்த 15.10.23இல் கிருஷ்ணமூா்த்தி, முருகன், சரவணன் ஆகிய மூவரும் சோ்ந்து மது அருந்தச் சென்றபோது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணமூா்த்தியைக் குத்திக் கொலை செய்ததாகவும் குற்ற உணா்வு உறுத்திக் கொண்டு இருந்ததால் கோபியில் உள்ள வட்ட சட்டப் பணிகள் அலுவலகம் மூலம் கோபி நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாகவும் முருகன் தெரிவித்தாா்.

இதையடுத்து, இந்த வழக்குக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய முருகனுக்கு நீதிபதி பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினாா்.

பின்னா், ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் முருகனை நீதிபதி முன்னிலையில் காவல் துறையினா் ஆஜா்படுத்தினா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய சரவணனைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.