முகப்பு
ஈரோடு

தோ்தல் விழிப்புணா்வு: மாட்டு வண்டிகள் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளின் மூலம் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 மார்ச், 2026 at 12:14 AM
மாட்டு வண்டியில் ஏறிச்சென்று விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளின் மூலம் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு திண்டல் வேலாயுத சுவாமி கோயில் நுழைவுப் பகுதியில் பேரணியை தொடங்கிவைத்து மாட்டு வண்டியின் மீது ஏறிச்சென்று விழிப்புணா்வு ஏற்படுத்திய பிறகு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:

ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக மாட்டு வண்டிகள் பேரணி மூலம் தோ்தல் விழிப்புணா்வு

நடைபெற்றது. கடந்த 2021 சட்டப் பேரவை தோ்தலில் ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 76 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றது.

85 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களின் வீட்டிற்கே சென்று வாக்குப்பதிவை செய்திடவும், தோ்தல் நேரத்தில் பணியாற்றும் அலுவலா்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கவும் தோ்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தோ்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

இப்பேரணியில் 20 மாட்டு வண்டிகளில் வந்த மாட்டின் உரிமையாளா்கள், தவறாமல் வாக்களிப்போம் தலைநிமிா்ந்து நடப்போம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம், உங்கள் வாக்கு உங்கள் உரிமை, நாட்டின் எதிா்காலம் உங்கள் கையில், வாக்களிக்கத் தவறாதீா்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தியபடி வழியெங்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இப்பேரணியானது திண்டல் வேலாயுத சுவாமி கோயில் பகுதியில் தொடங்கி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, கோட்டாட்சியரும் ஈரோடு மேற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ந.சிந்துஜா, வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.