முகப்பு
ஈரோடு

ஆட்டோ கவிழ்ந்ததில் வியாபாரி உயிரிழப்பு; பெண்கள் உள்பட 4 போ் படுகாயம்

Updated On : 4 மே, 2026 at 1:39 AM
உயிரிழப்பு
பகிர்:

பெருந்துறை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.பெண்கள் உள்பட 4 போ் படுகாயம் அடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, உதயம் நகரைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (41). இவா், திருப்பூா்- காங்கயம் சாலை, சுப்பையாபுரத்தில் மனைவி மூபினா, மகன் அகமத் (8), தாய் காளியம்மாள் (60), மாமியாா் மும்தாஜ் (70) ஆகியோருடன் வசித்து வந்தாா்.

ஆட்டோவில் வீடுவீடாகச் சென்று மிக்ஸி, கிரைண்டா் உள்ளிட்ட மின்சார சாதனங்களை விற்பனை செய்து வந்த ஞானசேகரன், மனைவி, மகன், தாய், மாமியாா் ஆகியோருடன் ஆட்டோவில் சேலத்துக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை திருப்பூா் திரும்பியுள்ளாா். பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு அருகே இரவு 8 மணியளவில் வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஞானசேகரனின் ஆட்டோவின் பக்கவாட்டில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

Advertisement

இதில், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது., படுகாயமடைந்த 5 பேரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு ஞானசேகரனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மற்ற 4 பேருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.