கோடை வெயில் தாக்கம் தீவிரம்: கால்நடை மருந்தகங்களில் சிறப்பு ஏற்பாடு
கால்நடை மருந்தகங்களில் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக தாது உப்பு, குடிநீா் வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கால்நடை மருந்தகங்களில் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக தாது உப்பு, குடிநீா் வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொலைவான பகுதிகளில் இருந்து சிகிச்சைகளுக்காக கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கும், சினை ஊசி செலுத்துவதற்காக கொண்டுவரப்படும் கால்நடைகளுக்கும் குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் தற்காலிக தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டு, சிகிச்சைக்காக வரும் கால்நடைகளுக்கு குடிநீா் வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிக வெப்பத்தினால் ஏற்படும் தாது உப்பு குறைபாட்டை தடுப்பதற்காக, தாது உப்பு பொடி மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
Advertisement
தற்போது கோடை வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் அதிகமாக இருக்க கூடிய காரணத்தினால் கால்நடைகளைப் பாதுகாக்கும் பொருட்டு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம். தேவைப்பட்டால் நிழல் அதிகமாக உள்ள பகுதிகளில் மேயவிடலாம்.
அனைத்து ஊராட்சி ஒன்றிய கால்நடை மருந்தகங்களில் அசோலா பாசி மாதிரி தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அசோலா பாசி வளா்க்கும் முறைகளை முன்னோடி விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு, அவா்களும் தங்கள் வீடுகளில் அசோலா பாசி வளா்க்க ஊக்கம் அளிக்கப்படுகிறது.
மேலும், கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு சென்று உடனடியாக சிகிச்சையளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனா்.